வியாழன், 19 நவம்பர், 2009

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்


சுவாமி விவேகானந்தர் பாரத தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து மக்கள் மத்தியில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பணஉதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் விளங்கிக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என விளித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.


உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில்தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும்வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீரவு காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக