செவ்வாய், 27 அக்டோபர், 2009

24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம்

வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்


இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

- மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ-
யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

ஓம் மந்திரம்


ஓம் மந்திரம்


அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்
உ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்
ம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும
உலகையும் வெளிபடுத்துகின்றது.


இம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.


உடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .

மனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி) வாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் , உடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி) அருளியுள்ளார்.

பிரணவ மந்திரம்


(ஓம் எனும் ஓங்காரம்)

ஓம் எனும் ஓங்காரத்தின் சிறப்பினைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டாலும் ஓங்காரத்தின் பெருமை அளவிட முடியாதது.

இருந்தாலும் இந்த கலியுகத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது மனிதர்களால் எற்றுகொள்ளதக்கதாக இருக்கிறது.

அவ்வாறே மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஓங்காரத்தையும் சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.

அதன் விளைவு மற்றும் முடிவுகள் இவ்வாறு வந்தன.

டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்தவை.


பாஸ்பனில் நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.

ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.

எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.

குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.

RELAXATION RESPONSE எனப் பெயரிட்டு கூறுவது.

மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்

மூச்சின் வேகம் குறைகிறது.

மன அலை அதிர்வை குறைக்கிறது.

மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.


( ஆதாரம் -ஹிந்து நாளிதழ், 7/12/1995)


ஓங்காரம் ஒலிக்கட்டும் . சுயம் (ஆன்மா) வெளித்தோன்றட்டும்.

சிவபுராணம்

தொல்லை யிரும்பிறவி சூழுந் தளைநீக்கி
அல்லலறத் தானந்த மாக்கியதே எல்லை
மருமா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசக மென்னுந் தேன்



நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால்
அவனருளாலே அவன்றாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரானந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

பல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
சொல்லா நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற ஙண்ணியனே


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட முடிய மாய விருளை
அறம்பாவ மென்னும் அறங்கயிற்றாற் பட்டி
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரு மொன்பது வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய

விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருக
நலந்தானிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ராமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுக்கும் பாரிக்கு மாரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெட

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத் தொளிக்கும் மொளியானே
நீரா யுரக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே


அன்பரக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமானே
ஆதியனே அந்தம் நடுவாகிஅ யல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெஞ்ஞானத்தாற் கொண்டுனர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொழியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொழியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வௌ;வேறே வந்தறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ருமுதே யுடையானே
வேற்ற விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனேம் மையா அரனேயோ வென்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

பஞ்ச புராணம்

தேவாரங்கள்

(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே

(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே

திருவாசகம்

(6)
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே

(7)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே

திருவிசைப்பா

(8)
ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே
அளிவளருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே


(9)
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே


திருப்புராணம்

(10)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

திருப்புகழ்


(11)
ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!


அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.



இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்

இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.

சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது

நலம் தரும் பழங்கள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.