வியாழன், 19 நவம்பர், 2009

காசியில் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ?


சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்நிகழ்ச்சி பெரிதளவில் என்னை பாதிக்கவில்லை. இதை
விட அதிர்ச்சி தரும் தகவல்களை இணையத்தில் கொடுத்துள்ளனர் அதுவும் படங்களுடன்.
அகோரிகளின் உணவு பழக்கங்கள், அவர்கள் போதையில் மிதப்பது போன்றவைகள் ஏற்கனவே மிகப்பெரிய தகவல்களாக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகள் இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீக மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்ப்பட்டாலும் அது இப்பொழுதய விவாதப் பொருளாக நான் கருதவில்லை.

காசி ஒரு உலக சுடுகாடு, அங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சவம் எரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 1000 த்திற்கு மேற்பட்ட சவங்கள் எரியூட்டப்படுகின்றது மற்றும் மாயான காட்டில் இருக்கும் நெருப்பு என்றுமே அனைவதில்லை. இவையனைத்தும் அங்கு வழக்கமான ஒன்று தான் அனைவரும் அறிநத்தே.

அஙுகு எங்கும் நிகழாத என்னை ஆச்சாரியப்படுத்திய சில
விசயங்களையே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தேன் ஆனால் அது பற்றி அத்தொலைக்காட்சியில் தெளிவு படுத்தவில்லை. ஒரு வேலை இந்த பதிவு தெளிவுபடுத்துமானால் அது அனைவருக்கும் நலமே.


நான் இணையத்தில் தேடிய அதிசயத்தக்க விசயங்கள்




காசியில் (அதிகப்படியான ) பிணங்கள எரிக்கப்படும் பொழுது, பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அதுபற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாகஅனைத்து தரப்பினரும் கூறுகின்றனர், தொலைக்காட்சியினரும் இதையே ஆமோதித்தனர்)





காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?





காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதிகாளாகட்டும், காசயின் பிற பகுதிகளாகட்டும் என்னதான் அசுத்தங்கள் ஏற்படுத்தினாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)






மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?

(குறிப்பு இது இங்குள்ள கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)




பல்லி ஒலிப்பதில்லை ஏன்?





கருடன் பறப்பதில்லை ஏன்?



இதற்கான அறிவியல்காரணங்களை தேடுகின்றேன் கிடைக்கவில்லை.ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமோ? அல்லது அந்த சவங்களின் மீதுபோற்றப்படும் மஞ்சள் துணிகள் காரணமாக இருக்குமா?


கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்.


ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும
கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள்ஆனாலும், ஏன் பல ஆண்டுகள்ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.


ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து (பிற ந்திகளிலிருந்து எடுத்த) தண்ணீரும் கெடாமல் இருக்குமா?


அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.

அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?


இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.

மேற்கூறிய நிகழ்விற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். (அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள
காரணமும் இருக்கும்.) ஆனால் அது இங்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.

சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டிஅதாவது ஆக்சிஜன்அளவு அந்நீரில் மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு
தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?


இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை
இன்னும் வெளியிடவில்லையா? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................? பின்னூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்


சுவாமி விவேகானந்தர் பாரத தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து மக்கள் மத்தியில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பணஉதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் விளங்கிக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என விளித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.


உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில்தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும்வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீரவு காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.

காமராஜரின் சீரிய சிந்தனைகள்


காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.

பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.

இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.

எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.

வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்

நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.

இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.

வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.

குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.

காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.

வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.

படிக்கும் போது அரசியல் வேண்டாம்

அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.

ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.

படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.

படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.

உழைத்து வாழ வேண்டும்

இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.

காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.

உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.

வீரமுடன் வாழுங்கள்

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் - அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”

என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.

நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக - விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.

1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.

மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.

வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.

சட்டத்தை மதித்திடுங்கள்

முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.

சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.

“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.

“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.

சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.

“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.

ஒற்றுமையோடு வாழுங்கள்

கருத்து வேறுபாட்டினால் ஒருவருக்கொருவர் சண்டைப்போடுவது நல்லதல்ல. ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது. முன்னேற விரும்புகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தினார் காமராஜர். 1960ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில்பேஇய கமராஜர்,

“குறுகிய உணர்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்துச் சண்டைப்போடக்கூடாது. இருப்பவர்கள் வேண்டுமானால் தாராளமாகச்சண்டைப்போட்ட்டும்; பணக்காரர்களுக்கு வேறு வேலையில்லை யென்றால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே இனம், அதாவது பட்டினிப் பட்டாளம்: எங்களைச் சண்டைக்குக் கூப்பிடாதீர்கள்.

வடக்கிலிருந்தாலும், தெற்கிலிருந்தாலும், தமிழன் என்றாலும் வங்காளி என்றாலும் ஏழைகள் எல்லோரும் ஒரே இனம்தான். நமக்குச்ச்ணைட் போட நேரமில்லை. நான் முன்னேற விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

“ஒற்றுமையே முன்னேற்றத்திற்கு அசைக முடியாத நம்பிக்கை அடித்தளம்” என்பது காமராஜரின் வாக்கு.

உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்

காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.

‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?

வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.

“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.

“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.

லஞ்சம் வாங்காதீர்

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.

படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.

ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.

படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.

அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.

அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.

ஏழைகளுக்கு உதவிடுங்கள்

முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.

கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.

“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.

“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?


எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.


அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..

மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.

3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.

அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.

பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.


இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.

நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.

இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.

நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெருவோம்.
பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.

சனி, 7 நவம்பர், 2009

வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம்


மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக் கப்படுகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த சக்தி களையே லட்சுமியாக உருவகித்து வழிபடுகிறார் கள். இந்த சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதை ஒன்றைக் காண்போம்.

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

வெற்றிக்கு வழி காட்டும் சிந்தனைகள்.

01. வெற்றியின் விதிகள் வகுப்பறையில் கற்பிக்கப்படுவதல்ல, வாழ்க்கையுடன் முட்டி மோதித்தான் அதைக் கற்க முடியும்.

02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.

03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.

04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.

05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.

06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.

07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.

08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.

09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.

10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.

11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.

13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.

14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.

15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.

16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.

17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.

18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.

19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.

20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.

22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.

23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.

24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.

இதயம் சில உண்மைகள்!


இதயம் சில உண்மைகள்!


1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.


2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .



5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).



8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.




9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.



10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.




12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.

இதயம் செயல்படும் முறை


நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?
நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.

இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?
இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் செயல்பாடுகள் :

அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

பிற காரணங்கள் :
சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?
இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்
நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.

சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?
இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?
இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்
களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும் ?
தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.

ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.

மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

இதயத்தின் அமைப்பு
இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்
திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இதய வால்வுகள் :
இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.

இதயத்துக்கும் ரத்தம் தேவை :
உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :
இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

முதலாவது ஒலி :
இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.

முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

இரண்டாவது ஒலி :
கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்

மூன்றாவது ஒலி :
இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

நான்காவது ஒலி :
மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

பிற இதய ஒலிகள் :
மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம்

வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்


இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

- மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ-
யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

ஓம் மந்திரம்


ஓம் மந்திரம்


அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்
உ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்
ம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும
உலகையும் வெளிபடுத்துகின்றது.


இம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.


உடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .

மனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி) வாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் , உடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி) அருளியுள்ளார்.

பிரணவ மந்திரம்


(ஓம் எனும் ஓங்காரம்)

ஓம் எனும் ஓங்காரத்தின் சிறப்பினைச் சொல்ல ஒரு பதிவு போதாது.

ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டாலும் ஓங்காரத்தின் பெருமை அளவிட முடியாதது.

இருந்தாலும் இந்த கலியுகத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது மனிதர்களால் எற்றுகொள்ளதக்கதாக இருக்கிறது.

அவ்வாறே மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஓங்காரத்தையும் சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.

அதன் விளைவு மற்றும் முடிவுகள் இவ்வாறு வந்தன.

டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்தவை.


பாஸ்பனில் நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.

ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.

எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.

குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.

RELAXATION RESPONSE எனப் பெயரிட்டு கூறுவது.

மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்

மூச்சின் வேகம் குறைகிறது.

மன அலை அதிர்வை குறைக்கிறது.

மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.


( ஆதாரம் -ஹிந்து நாளிதழ், 7/12/1995)


ஓங்காரம் ஒலிக்கட்டும் . சுயம் (ஆன்மா) வெளித்தோன்றட்டும்.

சிவபுராணம்

தொல்லை யிரும்பிறவி சூழுந் தளைநீக்கி
அல்லலறத் தானந்த மாக்கியதே எல்லை
மருமா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசக மென்னுந் தேன்



நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால்
அவனருளாலே அவன்றாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரானந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

பல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
சொல்லா நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற ஙண்ணியனே


வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட முடிய மாய விருளை
அறம்பாவ மென்னும் அறங்கயிற்றாற் பட்டி
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரு மொன்பது வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய

விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருக
நலந்தானிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ராமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுக்கும் பாரிக்கு மாரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெட

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத் தொளிக்கும் மொளியானே
நீரா யுரக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே


அன்பரக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமானே
ஆதியனே அந்தம் நடுவாகிஅ யல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெஞ்ஞானத்தாற் கொண்டுனர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொழியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொழியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வௌ;வேறே வந்தறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ருமுதே யுடையானே
வேற்ற விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனேம் மையா அரனேயோ வென்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

பஞ்ச புராணம்

தேவாரங்கள்

(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே

(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே

(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே

திருவாசகம்

(6)
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே

(7)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே

திருவிசைப்பா

(8)
ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே
அளிவளருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே


(9)
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே


திருப்புராணம்

(10)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

திருப்புகழ்


(11)
ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!


அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.



இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்

இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.

சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது

நலம் தரும் பழங்கள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.

திங்கள், 26 அக்டோபர், 2009

நேர்முகத் தேர்வுக்கான ஆலோசனைகள்


நமது திறன்களை நேரடியாக பிரதிபலித்து காட்டுவது நேர்முகத் தேர்வு. எழுத்துத் தேர்வில் அனைவருக்கும் அனுபவம் இருந்தாலும் நேர்முகத்தேர்வு சற்று வித்தியாசமானது. நேர்முகத் தேர்வில் வெல்வதற்கான நுணுக்கங்களை சில இங்கே

'பேசுங்கள்' உங்களைப் பற்றி தெரிந்து கொள்கின்றேன் என்பதை நேர்முகத் தேர்வுக்கான ஒருவகை விளக்கம் என்று கூறலாம். உயர்கல்விக்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்யவும், வேலை நாடுனர்களை தேர்வு செய்யவும் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைமுறை பரவலாக இருந்து வருகின்றது.

பன்முகத் திறன்களை மதிப்பீடு செய்து அவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்தால்தான் அளிக்கப்பட்ட பணியினை திறம்பட செய்ய முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் சில பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தும் நடைமுறை உள்ளது.

உதாரணமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பணிவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்துகின்றது. சாதாரணமாக எழுத்தர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிக் காலியிடங்களை நிரப்புவதற்கு வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தொகுதி 2, தொகுதி 1 போன்ற தேர்வுகளுக்கு கல்வித் தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 தேர்வின்போது மூன்று நிலைகள் உள்ளது. முதலில் முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை), இரண்டாவது கட்டமாக முதன்மைத் தேர்வு (விரிவாக விடையளித்தல்) என்ற வகையில் நடைபெறுகிறது. மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தொகுதி 1 மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு இதழ் பதிவு பெற்ற அலுவலர்களாக பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதால் பொறுப்பு மிக்க தலைமைப் பண்புடைய, முடிவெடுத்து செயல்படும் திறன்களை உடையவர்களை இனங்கண்டு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தேர்வு முறைகள்:

ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளிவந்து நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கும் சூழலில், நேர்முகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சில ஆலோசனைகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

எழுத்துத் தேர்வு என்பது கற்றறிந்தவற்றை கேள்விக்கேற்ப சரியாக எழுத்து மூலம் விடையளிப்பதைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நேர்முகத் தேர்வு என்பது வாய்மொழியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பதில் அளிப்பவரின் ஆளுமைத்திறன், புரிதல், பதில் அளிக்கும் பாங்கு, நடை, உடை, பாவனை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.

நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தும்போது தேர்வாணைய உறுப்பினர்கள், நிரப்பப்பட இருக்கக்கூடிய பணிகள் சம்பந்தபட்ட துறைத் தலைவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொள்வர். நேர்முகத் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

அடிப்படை விஷயங்கள்:

உங்களது பெயர், பெற்றோரின் பெயர்கள், ஊர், கல்வித்தகுதி, விரும்பும் பணி, பிற தகுதிகள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அதன் அடிப் படையில் கேள்விகள் முதலில் அமையும். உங்களது பெயருக்கான காரணம், நீங்கள் வசிக்கும்பகுதி அல்லது மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். படித்த பாடத்திலிருந்து அடிப்படையாக சில கேள்விகளை எதிர்பார்க்கலாம். அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்த துறை மற்றும் பணி குறித்த அடிப்படை விவரங்கள் மற்றும் அப்பணியை தேர்வு செய்யும் காணரங்கள் குறித்து வினா எழுப்பினால் விளக்கம் அளிக்க தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏதாவது ஒரு பணியில் இருந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வந்திருந்தால் அப்பணி சார்ந்த விபரங்கள் மற்றும் தொகுதி2-ல் அடங்கிய பணியை தேர்வு செய்யும் காரணத்தை கேட்டால் கூறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

சாரணர்படை, தேசிய சேவைப்பணி, என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுப்புற சூழல் குழுமம், சமூகப் பணிகள் போன்ற ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் குறிப்பிட்டால் அவை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் அவை பற்றிய கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.

செய்திகள், புள்ளிவிவரங்கள்

அன்றாட நிகழ்வுகள், தமிழக அளவில், இந்திய அளவில், உலகளவில் என்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பற்றி தகவல் சேகரித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல், சட்டமன்ற இடைத் தேர்தல் என்று அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வெளியீடான தமிழரசு மாத இதழில் அரசின் திட்டங்கள், அரசின் மூலம் அளிக்கப்படும் விருதுகள், இதர செயல்பாடுகள், திட்ட விளக்கங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள், பல்வேறு அரசுத்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் பற்றி செய்திகள் வெளிவரும். அவற்றில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து தேவைக்கு பயன்படுத்தலாம். நடப்புச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் ஆதார நூல்களிலிருந்து குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இணைய தளத்தின் மூலமும் அரசுத் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் தேவையான தகவல்களை சேகரிக்கலாம்.

பயிற்சி பெறுங்கள்

எழுத்துத் தேர்வு என்பதில் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வு என்பது பலருக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஆகவே மாதிரி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு தனது குறை நிறைகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளலாம். "அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆட முடியும்'' என்பது போல பலமுறை மாதிரித் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொண்டால், தயக்கமின்றி இயல்பாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.

நேர்முகத் தேர்வில் கேள்விகள் எத்தகைய தன்மை வாய்ந்தவையாக அமையும் என்பதை ஓரளவு கணிக்கலாம். இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வின் போக்கு சிறிதளவு மாறுபடுவதற்கும் வாய்ப்பிருக்கும். ஆகவே கலந்து கொண்டவர்களின் அனுபவத்தைப் பெற்று அதற்கேற்ப தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் தங்களைப் பற்றிய தகவல்களை அளித்து கேள்விகளாக கேட்கும்படி கூறலாம். அவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து பழகும்போது நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது ஓரளவு எளிதாகிவிடும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட வேண்டும். பயணத்திற்கான முன்பதிவு, அணியும் உடைகளை ஒழுங்கு செய்து கொள்ளுதல், உரிய சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுதல் போன்றவையும் முக்கியமானவையாகும். நேர்முகத் தேர்வு நடக்கும் அறையில் நுழையும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முடிந்து வெளியில் செல்லும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து தயார்படுத்தி கொண்டால் தடுமாற்றம் ஏற்படாது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் சிறப்பாக எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம். இட ஒதுக்கீடு, வெளிப்படையான தேர்வுமுறை, நடுநிலையான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுமுறை அமைந்துள்ளதால் சமுதாயத்தில் பொருளாதார, சமூக ரீதியாக பின் தங்கியவர்களும் பணிவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உருவாகி உள்ளது.

உங்களது உழைப்பு, திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து முறையான பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.