திங்கள், 26 அக்டோபர், 2009

நேர்முகத் தேர்வுக்கான ஆலோசனைகள்


நமது திறன்களை நேரடியாக பிரதிபலித்து காட்டுவது நேர்முகத் தேர்வு. எழுத்துத் தேர்வில் அனைவருக்கும் அனுபவம் இருந்தாலும் நேர்முகத்தேர்வு சற்று வித்தியாசமானது. நேர்முகத் தேர்வில் வெல்வதற்கான நுணுக்கங்களை சில இங்கே

'பேசுங்கள்' உங்களைப் பற்றி தெரிந்து கொள்கின்றேன் என்பதை நேர்முகத் தேர்வுக்கான ஒருவகை விளக்கம் என்று கூறலாம். உயர்கல்விக்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்யவும், வேலை நாடுனர்களை தேர்வு செய்யவும் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைமுறை பரவலாக இருந்து வருகின்றது.

பன்முகத் திறன்களை மதிப்பீடு செய்து அவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்தால்தான் அளிக்கப்பட்ட பணியினை திறம்பட செய்ய முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் சில பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தும் நடைமுறை உள்ளது.

உதாரணமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பணிவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்துகின்றது. சாதாரணமாக எழுத்தர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிக் காலியிடங்களை நிரப்புவதற்கு வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தொகுதி 2, தொகுதி 1 போன்ற தேர்வுகளுக்கு கல்வித் தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 தேர்வின்போது மூன்று நிலைகள் உள்ளது. முதலில் முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை), இரண்டாவது கட்டமாக முதன்மைத் தேர்வு (விரிவாக விடையளித்தல்) என்ற வகையில் நடைபெறுகிறது. மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தொகுதி 1 மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு இதழ் பதிவு பெற்ற அலுவலர்களாக பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதால் பொறுப்பு மிக்க தலைமைப் பண்புடைய, முடிவெடுத்து செயல்படும் திறன்களை உடையவர்களை இனங்கண்டு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தேர்வு முறைகள்:

ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளிவந்து நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கும் சூழலில், நேர்முகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சில ஆலோசனைகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.

எழுத்துத் தேர்வு என்பது கற்றறிந்தவற்றை கேள்விக்கேற்ப சரியாக எழுத்து மூலம் விடையளிப்பதைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நேர்முகத் தேர்வு என்பது வாய்மொழியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பதில் அளிப்பவரின் ஆளுமைத்திறன், புரிதல், பதில் அளிக்கும் பாங்கு, நடை, உடை, பாவனை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.

நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தும்போது தேர்வாணைய உறுப்பினர்கள், நிரப்பப்பட இருக்கக்கூடிய பணிகள் சம்பந்தபட்ட துறைத் தலைவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொள்வர். நேர்முகத் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

அடிப்படை விஷயங்கள்:

உங்களது பெயர், பெற்றோரின் பெயர்கள், ஊர், கல்வித்தகுதி, விரும்பும் பணி, பிற தகுதிகள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அதன் அடிப் படையில் கேள்விகள் முதலில் அமையும். உங்களது பெயருக்கான காரணம், நீங்கள் வசிக்கும்பகுதி அல்லது மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். படித்த பாடத்திலிருந்து அடிப்படையாக சில கேள்விகளை எதிர்பார்க்கலாம். அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்த துறை மற்றும் பணி குறித்த அடிப்படை விவரங்கள் மற்றும் அப்பணியை தேர்வு செய்யும் காணரங்கள் குறித்து வினா எழுப்பினால் விளக்கம் அளிக்க தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏதாவது ஒரு பணியில் இருந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வந்திருந்தால் அப்பணி சார்ந்த விபரங்கள் மற்றும் தொகுதி2-ல் அடங்கிய பணியை தேர்வு செய்யும் காரணத்தை கேட்டால் கூறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

சாரணர்படை, தேசிய சேவைப்பணி, என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுப்புற சூழல் குழுமம், சமூகப் பணிகள் போன்ற ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் குறிப்பிட்டால் அவை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் அவை பற்றிய கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.

செய்திகள், புள்ளிவிவரங்கள்

அன்றாட நிகழ்வுகள், தமிழக அளவில், இந்திய அளவில், உலகளவில் என்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பற்றி தகவல் சேகரித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல், சட்டமன்ற இடைத் தேர்தல் என்று அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வெளியீடான தமிழரசு மாத இதழில் அரசின் திட்டங்கள், அரசின் மூலம் அளிக்கப்படும் விருதுகள், இதர செயல்பாடுகள், திட்ட விளக்கங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள், பல்வேறு அரசுத்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் பற்றி செய்திகள் வெளிவரும். அவற்றில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து தேவைக்கு பயன்படுத்தலாம். நடப்புச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் ஆதார நூல்களிலிருந்து குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இணைய தளத்தின் மூலமும் அரசுத் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் தேவையான தகவல்களை சேகரிக்கலாம்.

பயிற்சி பெறுங்கள்

எழுத்துத் தேர்வு என்பதில் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வு என்பது பலருக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஆகவே மாதிரி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு தனது குறை நிறைகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளலாம். "அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆட முடியும்'' என்பது போல பலமுறை மாதிரித் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொண்டால், தயக்கமின்றி இயல்பாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.

நேர்முகத் தேர்வில் கேள்விகள் எத்தகைய தன்மை வாய்ந்தவையாக அமையும் என்பதை ஓரளவு கணிக்கலாம். இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வின் போக்கு சிறிதளவு மாறுபடுவதற்கும் வாய்ப்பிருக்கும். ஆகவே கலந்து கொண்டவர்களின் அனுபவத்தைப் பெற்று அதற்கேற்ப தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் தங்களைப் பற்றிய தகவல்களை அளித்து கேள்விகளாக கேட்கும்படி கூறலாம். அவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து பழகும்போது நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது ஓரளவு எளிதாகிவிடும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட வேண்டும். பயணத்திற்கான முன்பதிவு, அணியும் உடைகளை ஒழுங்கு செய்து கொள்ளுதல், உரிய சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுதல் போன்றவையும் முக்கியமானவையாகும். நேர்முகத் தேர்வு நடக்கும் அறையில் நுழையும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முடிந்து வெளியில் செல்லும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து தயார்படுத்தி கொண்டால் தடுமாற்றம் ஏற்படாது.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் சிறப்பாக எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம். இட ஒதுக்கீடு, வெளிப்படையான தேர்வுமுறை, நடுநிலையான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுமுறை அமைந்துள்ளதால் சமுதாயத்தில் பொருளாதார, சமூக ரீதியாக பின் தங்கியவர்களும் பணிவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உருவாகி உள்ளது.

உங்களது உழைப்பு, திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து முறையான பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.

மகிழ்ச்சி என்பது என்ன?

குழந்தை தத்தித்தத்தி நடைபழகுவதைக் காணும் பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

* கண்ட கண்ட பெண்களின் பின்னால் சுற்றித் திரிவது சிலருக்கு மகிழ்ச்சி. அவள் அவனை திரும்பிப் பார்த்தால் இன்னும் சந்தோஷம்.

* துணைக்கு ஆளின்றி வருபவர்களை கண்டால் திருடனுக்கு மகிழ்ச்சி.

இப்படி பலருக்கு பலவித மகிழ்ச்சி.

உண்மையில் மகிழ்ச்சி என்பது என்ன? அதன் இலக்கணந்தான் என்ன?

மகிழ்ச்சிக்கென்று தனி இலக்கணம் கூற முடியாது. அது மனித மனத்தின் ஒருவகை உணர்ச்சி, அவ்வளவுதான். அந்த மனதில் அவரவர் நிலைக்கும், சக்திக்கும், இயல்புக்கும் ஏற்றபடி ஏற்படும் உணர்ச்சி அலைகள் தான் மகிழ்ச்சி எனும் பெயர் பெறுகின்றன. அந்த மனநிலைதான் நாமும், மற்றவர்களும் விரும்புவதாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்மை விரும்புகிறோம், மற்றவர்களையும் விரும்புகிறோம். எல்லாமே நமக்கு சந்தோஷம் தருபவையாக இருக்கின்றன.


ஒருவருடைய மனம் எத்தகைய பயிற்சியைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தே அவருடைய மனம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது. இதனால்தான் ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் ஒன்று மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. தித்திக்கும் இனிப்பைக்கூட வெறுப்பவர்கள் இருக்கின்றனர். எனவே மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பழக்கம் தான்.

மனம் பொதுவாக புறமனம், ஆழ்மனம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. அதாவது மனதின் ஒருவித அனுபவம்தான் மகிழ்ச்சி எனப்படுகிறது. அதுபோலவே, மகிழ்ச்சிக்கு நேர் எதிரான துயரமும் மனதின் ஒரு அனுபவம்தான். இன்பத்தையும், துன்பத்தையும் மனம்தான் அனுபவிக்கிறது.

இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பொதுவாக இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. ஒன்று புறக்காரணம் மற்றது அகக்காரணம். புறக்காரணங்களால் ஏற்படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மனதின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும்தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழித் தால் நம் ஆயுள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழித்து விட முடியும். நம்முடைய மனதில்தான் மகிழ்ச்சி புதையுண்டு கிடக்கிறது. நாம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். நம்முடைய மனத்தின் ஆற்றல் அளவிட முடியாதது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான சுரங்கத்தில் அதிக கவனத்துடன் தோண்டும் போது தங்கம் கிடைப்பது போல், நம்முடைய மனமாகிய சுரங்கத்தில் ஆழமாகத் தேடினால் மகிழ்ச்சி என்னும் நவரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.

மனத்தில் உண்டாகும் மகிழ்ச்சியான எண்ணங்களால் உடல் அழகு பெறும். தைரியமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் உடலுக்கு வலுவைத் தருகின்றன. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்ணமும், சாந்தமும் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியமும், திடமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனதையும், பரிசுத்தமான எண்ணங்களையும் கொண்டிருந்தால் நாமும் இன்பமாக வாழ முடியும். நம்முடைய மனதில் மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் விரைவிலேயே மகிழ்ச்சி நிச்சயம்.

கனவுகளும், நனவுகளும்..!


மனதில் ஆழ்ந்து போன விஷயங்களும், சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி நாம் காணும் கனவின் பலன்களை அறிய ஆர்வப்படுகிறோம். நாம் கண்ட கனவுகள் அனைத்துமே அதற்கேற்ற பலன்களைத் தருகிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சன உண்மை!

மருத்துவ உலகில் கனவைப் பற்றிய ஆய்வு எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் நிறைய கிடைப்பார்கள். இளம் வயதினருக்கு காதலன், காதலி கிடைப்பார்கள். அப்படி கனவு காணும்போது தேங்கியிருப்பது நல்ல தண்ணீர் என்றால் பிரச்சினை விலகும். நீர் வற்றிய குளம் கனவில் வந்தால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்தது தாமதப்படும். அரசு கடன் தாமதமாகும். தடைகள் வரலாம். தண்ணீர் நிறைந்த குளத்தை கனவில் கண்டால், நீர் நிலையை கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். நன்மை நடக்கும். தாமரைப் பூவை கனவில் கண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். நிறைய பணம் சேரும். கடன் தீரும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குளத்தில் கால் கழுவுவது போல் கனவு கண்டால் கஷ்டம் மற்றும் நோய் நீங்கும். உற்சாகம் கூடும். நல்ல செய்திகள் வரும்.

குளத்தில் குளிப்பது போன்று கனவு கண்டால், கடவுள் அருள் நிறைய கிடைக்கும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவில் வந்தால், பொருளாதார வளம் ஏற்படும். சிலருக்கு அக்கம்பக்கம் தொந்தரவு ஏற்படும்.

மூதாதையர்கள் கனவில் வந்தால் அல்லது ஆசீர்வாதம் செய்தால் நன்மை பிறக்கும். பிரச்சினை இருந்தால் நல்ல முடிவு ஏற்படும். கனவில் இறந்துபோன உறவினர்கள் பேசினால், உதவிக்கு நிறைய பேர் வருவார்கள். நல்ல பெயரும், புகழும் கூடும். உறவினர்கள் உங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் பணம் வரும். எதிர்பார்க்காத பணம், புகழ் குவியும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று கூடும். உறவினர்களிடையே இருந்த விரிசல் மறையும்.

மூதாதையர் உறங்குவதாக கனவு வந்தால், ஆபத்திலிருந்து தப்பி விடுவீர்கள். மூதாதையர் உங்களுக்கு சாப்பாடு பரிமாறுவதாக கனவு கண்டால், சுபச்செய்தி வந்து சேரும்.

நீங்கள் கிழிந்த உடையை உடுத்தியிருப்பதாக கனவு வந்தால், பணம் வந்து சேரும். எந்த செயலிலும் தனியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். புத்தாடை அணிந்தது போல் கனவு வந்தால், பிரச்சினையில் சிக்கப் போகிறீர்கள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். மன அமைதி குறையும். சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது சுமத்தப்படும்.

உங்களுடைய கனவில் சிங்கம் வந்து, உங்களை விரட்டினால் அரசு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். ஆனாலும் பிரபலமானவர்கள் உதவியுடன் அந்த பிரச்சினையை சமாளிப்பீர்கள்.

கனவில் பாம்பு வந்தால் உங்களுக்கு கடவுள் துணை நிற்பார். அதிர்ஷ்டம் ஏற்படும். பெண்கள் கனவில் பாம்பு வந்தால் ஆயுள் கூடும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து ஒரு முடிவுக்கு வரும்.

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன்- மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும்.

ஊதுபத்தி புகை வருவது போல் கனவு கண்டால் துக்கம் நீங்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தீயை கனவில் கண்டால் நோய் விலகும். புதிய உற்சாகம் பிறக்கும். தீயை நீங்கள் கொளுத்துவதாக கனவில் வந்தால் முன்கோபத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். நாக்கில் கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள்.

உங்கள் கனவில் திருவிழாவை கண்டால் புதுவீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகன யோகமும் ஏற்படும். சொத்து சேரும்.

நகைகள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்குவீர்கள். இல்லாவிட்டால் இருக்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும். நகைகளை அடகு வைப்பதுபோல் கனவு வந்தால் சொத்து விற்பனை ஆகும். நகைகள் களவு போவதுபோல் கனவு கண்டால் பண வரவு உண்டாகும். வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது போல் கனவு கண்டால், உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். புகழ் அதிகரிக்கும்.