திங்கள், 26 அக்டோபர், 2009

மகிழ்ச்சி என்பது என்ன?

குழந்தை தத்தித்தத்தி நடைபழகுவதைக் காணும் பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

* கண்ட கண்ட பெண்களின் பின்னால் சுற்றித் திரிவது சிலருக்கு மகிழ்ச்சி. அவள் அவனை திரும்பிப் பார்த்தால் இன்னும் சந்தோஷம்.

* துணைக்கு ஆளின்றி வருபவர்களை கண்டால் திருடனுக்கு மகிழ்ச்சி.

இப்படி பலருக்கு பலவித மகிழ்ச்சி.

உண்மையில் மகிழ்ச்சி என்பது என்ன? அதன் இலக்கணந்தான் என்ன?

மகிழ்ச்சிக்கென்று தனி இலக்கணம் கூற முடியாது. அது மனித மனத்தின் ஒருவகை உணர்ச்சி, அவ்வளவுதான். அந்த மனதில் அவரவர் நிலைக்கும், சக்திக்கும், இயல்புக்கும் ஏற்றபடி ஏற்படும் உணர்ச்சி அலைகள் தான் மகிழ்ச்சி எனும் பெயர் பெறுகின்றன. அந்த மனநிலைதான் நாமும், மற்றவர்களும் விரும்புவதாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்மை விரும்புகிறோம், மற்றவர்களையும் விரும்புகிறோம். எல்லாமே நமக்கு சந்தோஷம் தருபவையாக இருக்கின்றன.


ஒருவருடைய மனம் எத்தகைய பயிற்சியைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தே அவருடைய மனம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது. இதனால்தான் ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் ஒன்று மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. தித்திக்கும் இனிப்பைக்கூட வெறுப்பவர்கள் இருக்கின்றனர். எனவே மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பழக்கம் தான்.

மனம் பொதுவாக புறமனம், ஆழ்மனம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. அதாவது மனதின் ஒருவித அனுபவம்தான் மகிழ்ச்சி எனப்படுகிறது. அதுபோலவே, மகிழ்ச்சிக்கு நேர் எதிரான துயரமும் மனதின் ஒரு அனுபவம்தான். இன்பத்தையும், துன்பத்தையும் மனம்தான் அனுபவிக்கிறது.

இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பொதுவாக இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. ஒன்று புறக்காரணம் மற்றது அகக்காரணம். புறக்காரணங்களால் ஏற்படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மனதின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும்தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழித் தால் நம் ஆயுள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழித்து விட முடியும். நம்முடைய மனதில்தான் மகிழ்ச்சி புதையுண்டு கிடக்கிறது. நாம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். நம்முடைய மனத்தின் ஆற்றல் அளவிட முடியாதது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான சுரங்கத்தில் அதிக கவனத்துடன் தோண்டும் போது தங்கம் கிடைப்பது போல், நம்முடைய மனமாகிய சுரங்கத்தில் ஆழமாகத் தேடினால் மகிழ்ச்சி என்னும் நவரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.

மனத்தில் உண்டாகும் மகிழ்ச்சியான எண்ணங்களால் உடல் அழகு பெறும். தைரியமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் உடலுக்கு வலுவைத் தருகின்றன. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்ணமும், சாந்தமும் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியமும், திடமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனதையும், பரிசுத்தமான எண்ணங்களையும் கொண்டிருந்தால் நாமும் இன்பமாக வாழ முடியும். நம்முடைய மனதில் மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் விரைவிலேயே மகிழ்ச்சி நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக