விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுக்குமே உயிர்வாழ நீர் தேவை. ஆனால் விலங்குகள் நீர் எங்கே உள்ளது என்று தேடி அலையக்கூடியவை. ஆனால் தாவரங்கள் அப்படியா?
தாவரங்கள் ஓரிடத்தில் நிலை பெற்று நிற்கும் என்று நமக்குத் தெரியும். நம் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம். ஆற்றோரம் அல்லது குளத்தோரம் உள்ள தாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும்.
ஆனால், நீர் கிடைக்கும் இடத்துக்கு வேர் சென்றுவிட்டால் மட்டும் போதுமா? வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இது சரியல்ல. நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது!
விலங்குகள் பலவற்றுக்கும் ‘இதயம்’ என்ற உறுப்பு உள்ளது. இந்த இதயம், ஒரு பம்ப் போல உடலின் பல பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், தாவரங்களுக்கு இதயம் போன்ற பம்ப் ஏதும் கிடையாது. அதனால், தாவரங்களால் நீரை அடியிலிருந்து ‘பம்ப்’ செய்து மேலே கொண்டுபோக முடியாது. புவி ஈர்ப்பு விசை, நீரை கீழ்நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், அதைமீறி நீர் ஒரு மரத்தின், செடியின் மேல் பகுதிகளுக்கு எப்படிச் செல்கிறது?
‘நுண்புழை இயக்கம்’ என்று ஒரு கருத்து உண்டு. நுண்புழை என்றால், மெல்லிய, மயிரளவு அகலம் மட்டுமே உள்ள ஒரு குழாய். பள்ளிக்கூடங்களில் சோதனைச் சாலையில் இதனை நீங்கள் பார்த்திருக்கலாம். நீர் உள்ள பாத்திரத்தில் இந்த நுண்புழையைச் செருகுங்கள். பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக இந்தக் குழாயில் நீர் ஏறும். அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி நீர், ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும்.
இதனால்தான், தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த பம்பின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.
இதென்ன பெரிய விஷயம்? எந்த திரவமும் இப்படித்தானே இயங்கும், இதில் நீருக்கென்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். நீர் அளவுக்கு எந்த திரவமும் இப்படியான நுண்புழை இயக்கம் கொண்டதல்ல. சொல்லப்போனால் பாதரசம் போன்ற திரவம் முற்றிலும் நேர் எதிராக வேலை செய்யும். ஒரு நுண்புழையை பாதரசம் உள்ள பாத்திரத்தில் செருகினால், அந்தக் குழாயில் பாதரசத்தின் மட்டம் குறைவானதாக இருக்கும்.
தாவரங்கள் உயிர்வாழ பாதரசம்தான் தேவை என்றால், தாவரங்களின் கதி அம்பேல்தான்!
from → இயற்பியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக