செவ்வாய், 29 செப்டம்பர், 2009

இறைவனது சித்தம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது எப்படி?

அதை அறிவதில்லை, உணர்கிறோம். அவ்வாறு உணர வேண்டுமானால் எல்லாத் தடைகளும் மறைந்து போகும் அளவுக்கு அவ்வளவு தீவிரமாக, அவ்வளவு நேர்மையுடன் சங்கற்பிக்க வேண்டும். உன்னிடம் விருப்பு வெருப்பு, ஆசை, ஒரு கவர்ச்சி இவையெல்லாம் இருந்தால் அவை உனக்கும் உண்மைக்கும் இடையே திரையாக அமைந்து விடுகின்றன. ஆகவே, உன்னுடைய முதல் வேலை உன்னுடைய உணர்வின் இயக்கங்களையெல்லாம் ஆளவும், கட்டுப்படுத்தவும், திருத்தவும், அவ்வாறு மாற்ற முடியாதவைகளை களைந்துவிடவும் நீ முயல வேண்டும். முடிவில் எல்லாம் உண்மையின் பூரணமான, நிரந்தரமான வெளிப்பாடாக ஆகிவிட வேண்டும்.

இவ்வாறு ஆக வேண்டும் என்று ஒரு தரம் சங்கற்பித்தால் மட்டும் போதாது, ஏனெனில் நீ அடிக்கடி அவ்வாறு சங்கற்பிக்கத் தவறிவிடுவாய்.

இடைவிடாத நெருப்பைப் போல ஜீவனில் எரிந்து கொண்டிருக்கும் ஆர்வம் வேண்டும், உன்னிடம் ஒரு விருப்பு, ஓர் ஆசை, ஒரு கவர்ச்சி தோன்றும் ஒவ்வொரு தடவையும் அதை இந்த நெருப்பில் எறிய வேண்டும். இதை நீ விடாது செய்து வந்தால் உன்னுடைய சாதாரண உணர்வில் மெய்யுணர்வின் ஒரு மெல்லிய ஒளிக்கற்றை பாயத் தொடங்குவதை காண்பாய். முதலில் அது மங்கலாகவும் விருப்புகள், ஆசைகள், கவர்ச்சிகள் ஆகியவற்றின் இரைச்சல்களுக்குப் பின்னால் வெகு தொலைவிலும் இருக்கும். நீ இவற்றிற்கெல்லாம் பின்னால் சென்று பூரண அமைதியுடன், அநேகமாக மோனமாகவே இருக்கும் அந்த உண்மையான உணர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உண்மையான உணர்வுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள் எல்லா வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். தேவையானால் வேண்டுமென்றே எல்லாவற்றிலும் அதிகக் கடினமானவற்றை அவர்கள் தேர்ந்தெடுக்கவும் கூடும். ஆனால் இந்தக் கட்டத்தை அடைய நீ இன்னும் நெடுஞ்தொலைவு செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக