"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
புதன், 30 செப்டம்பர், 2009
தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு
செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். 7. ஆட்சி செய்யும் வல்லமை பெற்றவர். 8. ஒழுக்கமும் குலப்பண்பும் உடையவர். 9. நன்னெறியில் பொருளீட்டிய உள்ளத்தூய்மையும் நற்பண்பும் உடையவர். 10. மூவாண்டிற்குள் ஊர்ச்சபை வாரிய உறுப்பினராக இல்லாதவர். இத்தகைய தகுதிகளை குறைவின்றி பெற்றவர்களை குடும்பு மக்கள் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை தனித்தனி ஓலைகளில் எழுதி, அவ்வோலைகளை குடத்தினுள் இடுவர். உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் பொதுமக்கள் அனைவரின் முன்பாக விபரம் தெரியாத சிறுவனை அழைத்து அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குறிய ஓலைக்கட்டை எடுத்து அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி அதிலிருந்து ஒரு ஓலையை எடுத்து கணக்கன் நடுவர் கையில் கொடுப்பான், அந்த ஓலையில் உள்ள பெயரே கிராமச் சபை உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக