
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கவனித்திருக்கலாம்; அங்கே ஒவ்வொரு வளாகத்திலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஊனமுற்றவர்களுக்காக என்றே சிறப்பாக இடங்கள் ஒதுக்கி இருப்பார்கள். அவற்றில் வேறு யாராவது நிறுத்தினால் அபராதம் கட்டவேண்டிவரும். பொதுக் கழிவறைகள், பேருந்துகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்குத் தனி வசதிகள் உண்டு. இதையெல்லாம் பார்த்து வியந்து இந்த அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்களே, நமது நாட்டில் இது போல இல்லையே என்று எண்ணி வருந்தியது உண்டு. ஊனமுற்றவர் என்ற சொல்லுக்கு Physically Challenged, Physically Disabled என்று கூட சொல்லாமல் இப்போது “Differently abled” என்று மாற்றுத் திறன் கொண்டோர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
நமது நாட்டில் மாற்றுத் திறன் கொண்டவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு. அண்மையில் நடந்த சம்பவம் இது. பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அருகில் சக்கர வண்டியில் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரைக் கண்டு கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை இவர் கையில் எடுத்துப் போட்டார். கையில் திடீரென்று விழுந்த காசைப் பார்த்த இவர் பொங்கி எழுந்து விட்டார். ‘அடப்பாவி, நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை.. நானும் பஸ் ஏறத்தான் வந்தேன். வேண்டுமானால் உனக்கு பத்து ரூபாய் நான் தருகிறேன்,’ என்று கோபப்பட்டார். காசு போட்டவர் மன்னிப்பு கேட்டும் அவரால் பொறுக்க முடியவில்லை. இப்படித்தான் நமது சமூகம் மாற்றுத் திறன் கொண்டவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவும், உதவி தேவைப்படுபவர்களாகவும் கருதி தமக்கு சமமான நிலை அளிக்காமல் ஒதுக்கி விடுகிறது.

நமது சமூக எதிரொலிப்பாக திரைப்படங்களிலும் மாற்றுத் திறன் கொண்டவர்களை கதையில் ஒரு சுமையாகவும், பரிதாபமாகவும், சமயத்தில் வில்லத்தனமாகவும் காட்டி ஒரு வித அருவருப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய சூழலில் சாதாரணமாக ஊனம் உள்ளவர் ஆணாக இருந்தாலே அவர் பல இன்னல்களையும், சங்கடங்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒரு பெண் ஊனமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். அவள் சமூகத்தில் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் அவளுக்கு திருமணம் என்று வரும்போது உடல் ஊனம் கூட இருக்க வேண்டாம், குள்ளமாகவோ, கருப்பாகவோ இருந்தால் கூட அதையும் ஊனமாக எண்ணி அதிக வரதட்சணை கேட்டவர்கள் உண்டு. இவையெல்லாம் பெருமளவு இப்போது மாறிக் கொண்டு வருகின்றன. இருந்த போதும், நமது சமூகத்தில் மாற்றுத் திறன் கொண்டவர்களின் வாழ்வு மலர்ப்பாதை என்று சொல்லிவிட முடியாது.
பழனி மாம்பழ கவிச்சிங்க நாவலர் என்று ஒரு பெரும்புலவர் இருந்தார். அவருக்கு கண்பார்வை கிடையாது. அவர் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. முருகனின் அருள் பெற்றவர். அவரை சேதுநாட்டு மன்னர்கள் ஆதரித்து வந்தனர். அந்த மன்னர்களின் அரசவைக்கு பாடி பரிசில் பெற மற்றொரு புலவர் ஒருவர் வந்தார். வந்தவர் தாம் நூறு செய்யுள்கள் இயற்றி முதன் முறையாக அரங்கேற்ற வந்திருப்பதாக அறிவித்தார். பின்னர் அவைப் புலவராக அமர்ந்திருந்த நாவலரைக் கண்ட அவர், நாவலர் கண்பார்வை அற்றவர் என்று கண்டு, அவை மங்கலமாக இல்லையே என்று குறிப்பாக நாவலரை வெளியேறுமாறு கூறி அவமதித்தார். அக்காலங்களில் ஊனத்தை அமங்கலம் என்று கருதினார்கள். இப்போது அந்த எண்ணத்தை நினைத்தால் ஒரு விதத்தில் வியப்பாகக் கூட இருக்கும்.
நாவலரும் மறைவாக விலகினார். புலவர், தான் எழுதி வந்த பாடல்களை அரங்கேற்றம் செய்து முடிக்க, நாவலர் வெளியே வந்து இவை அனைத்தும் தான் ஏற்கனவே இயற்றியது என்று கூறி அதிர வைத்தார். தன் அபாரமான ஞாபக சக்தியால் ஒரே ஒரு முறைதான் கேட்டபோதும் பிழையின்றி அந்தப் புலவர் பாடிய அத்தனை பாடல்களையும் பாடினாராம். புலவர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு பரிசுகள் பெறாமல் திரும்பிப் போக எத்தனிக்கவும், கவிச்சிங்க நாவலர் அவரை மன்னித்து மன்னரிடம் பரிசு பெற்றுக் கொடுத்தாராம்.

மங்கலம் அமங்கலம் என்று பிரித்து வைத்திருப்பது ஒரு மனோதத்துவ மருத்துவம் என்று கண்ணதாசன் கூறுவார். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கிடைக்கும் போது மனம் மகிழ்ந்து உடல் சிலிர்க்கும் உணர்வைப் பெறுவது போல், இந்த மங்கல வழக்குகளும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று சொல்வார். இதுவரையில் சரி; ஆனால் நல்ல எண்ணத்தை பின்னணியாகக் கொண்ட இது போன்ற செயல்கள் கூட காலப்போக்கில் சமூக வக்கிரங்கள் ஏற்றப்பட்டு, கணவனை இழந்த பெண்ணைக் காண்பது அமங்கலம், ஊனமுற்றவர்களைப் பார்ப்பது கூட அமங்கலம் என்று மாறியது. அந்தணர் தனியாளாக வருவதைக் காண்பதும் அமங்கலம் என்று சொல்வது உண்டு. ஆனால் இது என்னவோ இந்து மதத்துக்குண்டான இழிவு என்று சொல்வதற்கில்லை.
ஏனெனில் இந்து மதத்தில் ஊனத்தை ஒரு ஒதுக்கக்கூடிய விஷயமாகவே கருதியதில்லை. சனாதன தருமத்தை நீரூற்றி வளர்த்த பெரியவர்கள், ரிஷிகள், ஏன் சில தெய்வங்கள் கூட, உடலில் ஊனம் உடையவர்களாக இருக்கிறார்கள். கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர். கண்ணனைக் காதலித்த பெண்களில் ஊனமுற்ற பெண்ணும் இருந்திருக்கிறாள். ஊனமுற்றவர்களை விலக்கி வைக்காமல் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல அவரவருக்குரிய பங்கை அளித்து வருவதையே இந்து மத இதிகாச புராணங்கள் பதிவு செய்துள்ளதை இச்சம்பவங்கள் மூலம் அறியலாம்.

பின் ஏன் ஊனத்தை அமங்கலம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு நேரிட்டது? இதற்குப் பின்னுள்ள சமூகப் பின்புலங்களை சற்று விரிவாகத்தான் அலச வேண்டும். கூட்டாக வாழ்வதே பழைய நாள்களில் பெரும்பான்மையாக இருந்த குடும்ப அமைப்பு. அதில் சொந்தத் தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்ன தாத்தா, பெரிய அத்தை என்று தூரத்து உறவினர்களைக் கூட வைத்து சம்ரட்சிப்பது தருமம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் கொண்டவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களையும் அரவணைத்து குடும்பத்தில் அவருக்கு அதிக கஷ்டம் தெரியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
ஆனால் அந்நியப் படையெடுப்புகள், சுரண்டல்கள், கொள்ளைகளினால் வளம் குன்றி தனிப்பட்ட வாழ்க்கையைத் தள்ளுவதே பெரிய கஷ்டம் என்று ஆனபின் எல்லா தருமங்களும் உதிர்ந்து போக பல குறுகிய மனப்பான்மைகளும், சுயநலமும் சேர்ந்து பல மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டன. இதன் நீட்சியாகவே குழந்தைத் திருமணம், சதி போன்ற கொடும் பாதகமான செயல்கள், சமூக சுயநலங்கள் நடைமுறை ஆகி, அது பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வந்த இந்து மதத்தின் மீது சுமத்தப் பட்டு, பரந்த நோக்குள்ள கொள்கைகள் எவ்வளவோ இருந்தும் மூடநம்பிக்கைகளும் இந்து மதக் கொள்கைகளாகப் பரிணமித்து விட்டன.
நமது இன்றைய காலகட்டத்தில் நாம் கண்கூடாக எத்தனையோ முதியோர் இல்லங்கள் பெருகி வருவதைக் காணவில்லையா.. வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களின் விளைவுதானே இப்படி பெற்றவர்களையே சுமையாக எண்ண வைத்திருக்கிறது. இதை யாரும் பாவம் என்று நினைக்காத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நூறு வருடங்களில் வயதான பெற்றோர்களை தள்ளி வைப்பது புனிதச் செயலாகவும் மதக் கொள்கையாகவும் கூட மாறக்கூடும். இப்படித்தான் அந்தந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடுகள் மதக்கொள்கைகளாக மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறே ஊனத்தையும் அமங்கலம் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.
இக்காலத்தில் இவை அனைத்தும் முற்றிலும் மாறா விட்டாலும் ஊனமுற்றோர் குறித்த சமூகத்தின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. இப்போது அவ்வாறு அமங்கலம் என்று நினைப்பதை சாதாரணக் கருத்தாகக் கூட யாரும் நினைப்பதில்லை. இது போன்ற பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போதும் நகைப்புக்கு உரியதாகத்தான் எண்ணுவோம். இந்து மதம் இப்படி எத்தனையோ மூட நம்பிக்கைகளையும் சீர் திருத்தங்களையும் விலக்கியும் ஏற்றும் கடந்து வந்திருக்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் செய்ததை, சொன்னதை இன்னமும் அப்படியே அமுல்படுத்தத் துடிக்கும் ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பு நோக்கும்போது இந்து மதமே மாற்றத்தை ஏற்றுக் கொள்கிற முற்போக்கான மதம் என்பதில் ஐயமில்லை.

இதற்கு நேர்மாறாக முற்போக்கு முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதத்தில் நடப்பதைச் சொன்னால் மேலும் நகைப்புதான் எழும். எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெளிநாட்டுப் பண உதவியுடன் களமிறங்குகிற மிஷனரிகள் மாற்றுத் திறன் கொண்டவர்களையும் வைத்து ஒரு கூத்து நடத்துகிறார்கள். பிறவி ஊனம் உள்ளவர்களைக் குணப்படுத்துகிறேன், நடக்க முடியாதவர் நடப்பார், குருடர் பார்வை பெறுவார், வாய் பேச முடியாதவர் பேசுவார் என்று போலி உத்திரவாதங்களை அள்ளிவிட்டு, அப்பாவி மக்களை மிஷனரிகள் ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள். சாதாரண மக்களும் இவர்கள் வலையில் விழுந்து மதம்மாறுகிறார்கள். தமது குறை தீராத போது, அந்த மக்களுக்குப் போதுமான நம்பிக்கை இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளுகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்க முயன்றால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடு என்று திரிக்கப்படும் என்று எண்ணி நடவடிக்கை எடுக்க யாரும் துணிவதில்லை.

மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான். கிறிஸ்தவத்தில் இது போல ஏதாவது மிராக்கிள் — அற்புதங்கள் செய்தால்தான் செய்பவரை ‘புனிதராக’ ஏற்றுக்கொள்வார்கள். அன்னை தெரேசா இப்படி எதுவும் செய்ததாகத் தெரியாவிட்டாலும் அவருக்கு புனிதர் என மரியாதை கிடைப்பதற்காகவே, ஒருவருக்கு கருப்பை புற்று நோயை அவர் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தினார் என்று கதைகட்டப் பட்டது. அப்படியும் புனிதர் என்ற பட்டம் பெற குறைந்தது இரண்டு அற்புதங்களாவது செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை கிறிஸ்தவ தலைமை விதிக்க, அப்படி இரண்டாவது அற்புதம் எதுவும் அன்னை தேரேசாவால் நடக்காமல் போனதால், ‘அர்ச்சிக்கப் பட்டவர்’ என்கிற பட்டம் மட்டுமே கிடைத்தது.
இப்படி இன்றைய நவீனமான காலத்திலும் இன்னமும் அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் உடல் ஊனங்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் மிகவும் முற்போக்கான மதம் என்று எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள். சில நாள்கள் முன்பு ஆனந்த விகடன், சாமியார்கள் ஸ்பெசல் என்று இணைப்பிதழ் ஒன்று வெளியிட்டார்கள். கிளுகிளுப்புக்காக பலான சாமியார்கள் பற்றிச் செய்தி வந்ததே தவிர, இந்த பாதிரி சாமிகளைப் பற்றி ஒரு வரி கூட இல்லை. போலிச் சாமியார்களில் பாதிரியார்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ஏனோ கண்டும் காணாமல் இருக்கின்றன.
மாற்றுத் திறன் கொண்டவர்களுக்குத் தேவை நம்முடைய இரக்கம் இல்லை. சமூகத்தில் மற்றவர்களுக்கு ஈடான மரியாதையும் இடமும்தான் அவர்களுக்குத் தேவை. அதை விடுத்து அவர்களைப் பிரித்து வைப்பதோ, சந்தையாக நினைத்து மத வியாபாரம் செய்வதோ மிகவும் கீழ்த்தரமான செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக