சனி, 1 ஆகஸ்ட், 2009

மாண்டூக்கிய உபநிஷதம்

இது அதர்வண வேதத்தை சார்ந்ததாகும். இவ்வுபநிஷத்தின் ரிஷி மண்டூக ரூபியான வருண பகவான். மாண்டூக்கிய உபநிஷதம் எல்லா உபநிஷதங்களையுன் விட சிறியது. ஆனால், இதற்கு ஆதிசங்கரருடைய பரமகுருவான ஸ்ரீ கௌடபாதாசாரியார், காரிகை என்னும் விரிவுரையை எழுதியுள்ளதால் மிகவும் பெருமை வாய்ந்தது.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் 'ஓம்' காரமே. எது காலங்களைக் கடந்து அப்பால் நிற்கிறதோ அதுவும் ஓம்காரமே.

அட்சரத்தால் இந்த ஆத்மா 'ஓம்'காரமாகும். ஓம் என்பது அ, உ, ம் என்று பகுதிகளாகும். இவையே ஜாக்ரம், சொப்பனம், சுஷ¥ப்தி முதலிய குறியீடுகளுக்கு ஈடாகின்றன. அகாரம், உகாரம், மகாரம் ஆகியவை ஓங்காரத்தின் மாத்திரைகளைக் கொடுக்கிறது. இவை மூன்றும் சேர்க்கும்விதமாக நான்காவது மாத்திரை ஒளிந்திருக்கிறது.

இரண்டற்றதாயும், சிவமாகவும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாகவும், விவரிக்க முடியாததாகவும் உள்ளது இந்த நாலாவது ஸ்தானம். இது ஆத்மாவின் துரீயநிலை.

ஒருவரே மூன்று வடிவில் காணப்படுகிறார். வலக்கண்ணில் விஸ்வரூபியாகவும், மனதுக்குள் ஒளி வடிவிலும், இருதய ஆகாசத்தில் பிரக்ஞையாகவும் ஒருவரே -- மூன்று விதமாக நம் உடலில் வசிக்கிறார். முறையே இவர்களுக்கு விசுவன், தைஜஸன், பிராஞ்ஞன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். நான்காமவனுக்கு துரீயன் என்று வைத்துக் கொள்வோம்.

விசுவரூபன் எப்போதும் ஸ்தூலமான போகங்களை அனுபவிப்பவன். வாழ்க்கையை ரசிப்பவன்.

தைஜஸன் வாசனாமயமான சூட்சும போகங்களை அனுபவிப்பவன்.

பிராஞ்ஞன் உணர்வுகளால் ஆனந்தத்தை அனுபவிப்பவன்.

விசுவனும் தைஜஸனும் காரியங்களின் விளைவுகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பிராஞ்ஞன் காரணத்தால் கட்டப்பட்டவன். காரியம், காரணம் இல்லாத நிலையே துரீயனின் செயல்பாடு.

பிராஞ்ஞன் எதையும் அறியாமல் ஈடுபடுபவன். துரீயன் எப்போதும் எல்லாவற்றையும் காண்பவன். ஒன்றை இன்னொன்றாகக் கொள்பவனுக்குக் கனவு உண்டாகிறது. ஆழ்பொருளை அறியாதவனுக்கு அஞ்ஞானமாகிய துயில் ஆட்கொள்கிறது.

'ஓம்' என்பதில் உள்ள அகாரம் விசுவனிடம் அழைத்துச் செல்கிறது. உகாரம் தைஜஸனுக்கு. மகாரம் பிராஞ்ஞனிடம் கொண்டு போய் விடுகிறது.

மாத்திரையில்லாத ஓங்காரத்தில் எவ்விதம் கடைத்தேறுவது? பிரணவமே பரம்; பிரணவமே பிரும்மம். பிரணவமே முடிவில்லாத பரபிரம்மமாகும்.

பிரணவத்திற்கு காரணமில்லை.
உதாரணங்கள் கொடுக்கவல்ல பிரிதொன்றுமில்லாதது.
அதற்கு அப்பால் வெளிகள் இல்லை.
காரண காரியமில்லாதது.
நாசமழிந்து போகாது.

பிரணவத்தை எவ்வாறு அடைவது? இருதயத்தில் வீற்றிருக்கும் இறைவரைக் கண்டு அறிய வேண்டும். ஞானியானவன் எங்கும் நிறைந்துள்ள பிரணவத்தை அறிந்தபின் துக்கப்படுவதேயில்லை.

எவை வெளிப்படையாக அறிய முடியாமல் உள்ளே இருக்கிறதோ, அவை கற்பனையே. எவை வெளிப்படையாக வெளிக்காட்டுகிறதோ, அவையும் கற்பனையே. நிகழ்காலத்தில் நாம் காண்பவை அனைத்தும் உண்மை போல் காட்சியளிக்கின்றன. வேற்றுமை இந்திரிய பேதத்தில்தான் இருக்கிறது.

நள்ளிரவில் பரத்தையின் வீட்டிற்கு சென்றவன் கையில் அகப்பட்டது கயிறாகத் தோன்றியது. ஆனால், அது பாம்பு. இருட்டில் நிச்சயமில்லாததால், எவ்வண்ணம் பழுதையானது பாம்பாகவும், பாம்பு பழுதையாகவும் விகல்பமாய் எண்ணவைக்கிறது. அவ்வண்ணமே, ஆத்மாவும் விகல்ப சிந்தனை கொள்கிறது.

அத்வைத சித்தி ஏற்படுவதற்கு நிச்சய புத்தி தேவை. பாம்பா பழுதையா என்று காணவேண்டும். ஜீவன், இந்திரியங்களுக்கு எட்டாதவைகளையும் நன்கு அறியும் திறன் வரவேண்டும். அவனுக்கு மூன்று அவஸ்தைகளையும் (ஜாக்கிரம், சொர்ப்பனம், சுஷ¥ப்தி) கடந்த துரீய நிலை கிட்டும்.

ஜாக்கிரத்தைக் கடப்பதால் புற விஷயங்களை அறிய முடிகிறது.
சொர்ப்பனத்தில் விஷய வாசனைகளின் வடிவங்களை உள்ளத்தால் கருதுகிறான்.
சுஷ¥ப்தி விஷயங்களும் வடிவங்களும் இல்லாத வெற்றிடம். இருட்டிலுள்ள தீக்குச்சி போல ஞானமும் ஆனந்தமுமே கிடைக்கின்றன.
துரீயத்தில் ஜீவனின் சுயரூபத்தை உணர்கிறான்.

ஓம் என்னும் அழிவில்லா வார்த்தை இவை அனைத்தையும் ஆத்மாவில் நிறுத்தும் பரம்பொருள்.

பார்க்க முடியாததும் தொட இயலாததும் பரம்பொருள். எல்லா வேறுபாடுகளுக்கும் மேம்பட்ட நிலையிலுள்ளதும் பரம்பொருள். சிந்தனைக்கு நன்கு விளக்கிச் சொல்லவல்லது பரம்பொருள். சிந்தனையில் விளக்கிச் சொல்ல இயலாத அப்பாற்பட்ட நிலையில் உள்ளதும் பரம்பொருள்.

பரம்பொருளின் நிரூவணம் இறைவரோடு எய்தும் ஐக்கிய நிலையில்தான் இருக்கிறது. பரிணாமத்தின் முடிவு இருமையில்லாத நிலை. இரைவர் அமைதியே உருவானவர்; அன்புமயமானவர்.

நித்தியமாய் நிர்மலமாய் நிஷ்களமாய்
நிராமயமாய் நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த்
துரிய நிறை சுடராய் எல்லாம்
வைத்து இருந்த தாரகமாய் ஆனந்த
மயம் ஆகி மனம் வாக்கு எட்டாச்
சித்து உருவாய் நின்ற ஒன்றைச் சுகாரம்பப்
பெருவெளியைச் சிந்தை செய்வாம்
- தாயுமான சுவாமிகள்

காண்பதற்கரியதாகவும், எளிதில் அறியக் கூடாததாகவும், பிறப்பற்றதாகவும், சமமாகவும், சுத்தமாகவும், வேற்றுமை நீங்கியதாகவும் உள்ள நிலையை எமது சக்திக்கு ஏற்றவாறு, எட்டிய வகையில் உணர்ந்தறிந்து வணங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக